முதல் பாகம்
படிக்க.....
இரண்டாம்
பாகம் படிக்க.....
அன்பு அம்மா, அப்பாவுக்கு,
நலம்.. இருவரின்
நலமரிய ஆவல்..
மீண்டுமொரு அழகான காதல் கதை முந்தய கடிதம். பின்னொரு நாளில்
என் குழந்தைகளுக்கும் காட்டிக் கொள்ள இதையும் பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன்.
வாழ்கையின் பல தேடல்களுக்கு விடைகளை அறிந்து கொள்கிறேன்.. வாழ்க்கை இவ்வளவு
ருசியானது என்று தெரிந்து கொள்கிறேன்.. மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாய்
இருக்கிறேன்..
காதல் சொல்லும் போது படபடப்பு.. சொன்ன பின்பு நிதானம்..
அம்மா மட்டுமில்ல, அவங்கள சுத்தி உள்ளவங்க மேல அப்பா வச்சிருந்த பாசம்.. நிறைய
தெரிந்து கொண்டேன்.. இப்படி நம்ம லைஃப் இருக்க கூடாதான்னு ஏங்கவைக்குற அளவு
காதல்.. நிச்சயம் நீங்க சொல்ற மாதிரி வாழ்க்கைன்றது நாம வாழ்றத பொறுத்தது தான்..
சந்திக்கும் நாள் எண்ணி காத்திருக்கிறேன்.
அன்பு மகள்.....
அன்பு மகளுக்கு,
மீண்டுமாய் நானும் உன் அம்மாவும்
சேர்ந்தே எழுதிக் கொள்வது.. இங்கு நன்கு நலமாய் உள்ளோம்.. உன்னை தான் ரொம்ப மிஸ்
பண்றோம்.. விரைவில் சந்திப்போம்..
இந்த கடிதங்கள் எங்களுக்கு எங்கள்
நல்ல நாட்களை நினைவு படுத்தி செல்கின்றன.. இப்படி எல்லாம் பேசினோம், வாழ்ந்தோம்
என்று பல நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு கற்றுத் தருகின்றன.. அது இன்னும்
எங்களுக்குள் காதலை தினம் தினம் அதிகப் படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது..
எங்கள் காதல் நாட்களில் நாங்கள்
நிறையவே பேசிக் கொள்வோம்.. பல நேரங்களில் விவாதிப்போம்.. நிறையவே முற்போக்கு
விஷயங்கள் என சொல்லலாம்.. சில விஷயங்கள் யோசித்துப் பார்த்தால் சரியென்று
தோன்றும்.. சில தவறென்று தோன்றும்.. எங்களுக்குள் அது எப்போதும் பரஸ்பரம் ஒரு நல்ல
புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உதவியது.. அவள் அப்படித்தான், அப்படித்தான்
யோசிப்பாள், அப்படித் தான் பேசுவாள் என்று நானோ, இல்லை நான் இப்படித்தான்,
இப்படித்தான் யோசிப்பேன், இப்படித் தான் பேசுவேன் என்று அவளோ ஒரு நாளும்
ஒருவரையொருவர் ஜட்ஜ் பண்ணியதே இல்லை.. மனதில் ஏதேனும் உறுத்திக் கொண்டிருந்தால்
மீண்டும் பேசிக் கொள்வோம்.. மனம் விட்டுப் பேசிக் கொள்ள தயங்கியதே இல்லை..
அப்படி பேசிக்கொண்ட சில விஷயங்களை
இந்த கடிதத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.. புரிந்துகொள்ள முயற்சி செய்..
புரியாவிட்டால் பரவாயில்லை.. வாழ்க்கை மெதுவாக புரிய வைக்கும்..
-----------------------------------------------------------------------------
வழக்கம் போல ஒரு மாலை நேரம்.. பேசிக்கொண்டிருந்தோம்..
அவள் தொடங்கினாள்..
"இப்ப நா உன் லைஃப்ல இல்லன்னு
வச்சிக்குவோம்.. வயசாகிட்டே போகுது.. பேசாம அப்பா அம்மா பாக்குற பொண்ண கல்யாணம்
பண்ணிக்கலாம்ல.. அவங்களுக்கும் பேரக் குழந்தைகளை பார்க்கணும், வளர்க்கனும்னு ஆசை
இருக்கும்ல.. "
"நிச்சயம் இருக்கும்.. பண்ணிக்குவேன்..
ஆனா அதுக்காக வயசாகிடுச்சு, ஊர்ல எல்லாம் என்ன பேசிக்குவாங்கனு எல்லாம் யோசிச்சு
பண்ணிக்க முடியாது.. என் மனசுக்கு எப்போ புடிக்குதோ அப்ப தான பண்ணிக்க முடியும்..
"
"அப்ப பெத்தவங்க சந்தோஷம் முக்கியம்
இல்லையா? அவங்க நமக்கு நல்லது தான பண்ணுவாங்க.. "
"ஆமா.. ஆனா இது அடுத்து வாழபோற 30-40
வருஷ வாழக்கை.. டக்குனு எப்படி முடிவு பண்றது? அந்த பொண்ணுக்கு என்ன
புடிக்கும்.. என்ன வேணும்னு தெரிஞ்சிக்கணும்.. கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கப்றம்
தெரிஞ்சிகிட்டு எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து வாழ்றது கஷ்டம்.. "
"கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும்
எப்படி தெரிஞ்சிக்குவ?? கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் விட்டுக் கொடுக்க
மாட்டியா?? கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பொண்ண நிறைய காதலிக்கலாம்.. நிறைய
விட்டுக் கொடுக்கலாம்ல. "
"பண்ணலாம் தான்.. ஆனா ஒரு சில சின்ன
விஷயங்கள், கொஞ்சமாவது அந்த பொண்ணோட விருப்பம், வெறுப்பு எல்லாம்
தெரிஞ்சிக்கணும்.. ஒரு வேளை அந்த பொண்ணு அவ பொறந்த ஊர்லையே வாழணும் நினைக்கலாம்..
நா வெளிநாடு போகணும் நினைக்கலாம்.. எனக்காக விட்டுக் கொடுத்துட்டு வரலாம்.. இல்ல
நா என்னோட விருப்பத்த விட்டுக்கொடுத்துட்டு வரலாம்.. கல்யாணத்துக்கு அப்புறம்னா
கண்டிப்பா விட்டுக் கொடுத்து தான் ஆகணும்னு விட்டுக்கொடுக்கணும்.. கல்யாணத்துக்கு
முன்னாடினா விட்டுக் கொடுக்க வேண்டாமல.. அவங்க அவங்க விருப்பபடி வாழக்கை
இருக்கலாம்ல.. "
"விட்டுக் கொடுக்குறது தப்புன்னு
சொல்றியா?? கல்யாணத்துக்கு முன்னாடினா என்ன பின்னாடினா என்ன.. விட்டுக்
கொடுக்குறதும் அன்பு தான.. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் எனக்காக ஏதாவது ஒரு
விஷயம் விட்டுக் கொடுக்கணும்னா இப்படித் தான் யோசிப்பியா?? "
"ஐயோ.. நிச்சயமா அப்படி இல்ல... கண்டிப்பா
விட்டுக் கொடுப்பேன்.. நான் சொல்ல வர்றது உனக்கு புரியல.. இப்ப நீ ஊர் பக்கம்
கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும், அம்மா அப்பாவ பக்கத்துல இருந்து
பார்த்துக்கணும்னு நினைக்குறனு வச்சிக்குவோம்.. அம்மா, அப்பா என்ன கல்யாணம் பண்ணி
வைக்குறாங்க, நா கல்யாணத்துக்கு அப்புறம் வேற இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போய்டறேன்..
எனக்காக உன் ஆசையை விட்டுட்டு வந்துடுற..
ஆனா என்னைக்காவது ஒரு நாள்.. நீ தனியா இருக்கும் போது..
நமக்குள்ள சண்டை வரும் போது.. எதோ ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது.. குழந்தைங்க
ஒவ்வொரு நாளும் வளரும் போது, குறும்பு செய்யும் போது, ஒவ்வொரு வார்த்தை பேசும்
போது.. நீ சின்ன வயசுல இத விட அதிகமா பண்ணுன, இதெல்லாம் பண்ணுனனு சொல்றதுக்கு
அம்மா பக்கத்துலஇல்லாத போது... தோணும்... கண்டிப்பா தோணும்.. நம்ம அப்பா, அம்மா
பக்கதுல இல்லையே.. நம்ம நண்பர்கள் கூட இல்லையே.. ஊர்ல இருந்த இத எப்படி
பண்ணிருக்கலாம்.. ஒரு வேளை நீ எதிர்பார்த்த அளவு நா இல்லாம போகும் போது, இவனுக்காக
எவ்ளோ விட்டுக் கொடுத்தோம்.. இந்த வாழக்கை இப்படி இருக்குனு தோணும்... எனக்கும்
அப்படித் தான்.. இவளோ விஷயம் விட்டுக் கொடுத்து வாழ்க்கை இப்படி இருக்கேனு
சலிச்சிக்க தான் தோணும்.. அப்புறம் வாழக்கை முழுசும் ஒரு சகிப்போட தான் வாழணும்.. "
"இங்க எல்லாம் அப்படித் தான.. கிடச்ச
வாழ்கைய ஏத்துகிட்டு, சகிச்சிகிட்டு வாழந்தா சந்தோசமா இருக்க முடியாதா என்ன???
"
"இருக்கலாம்.. அந்த அளவுக்கு அந்த
வாழ்க்கை வொர்த்’ஆ இருக்கமா சொல்லு?? நம்ம வாழ்கைய நாம நெனச்ச மாதிரி அமைசிக்க
முடியும்னு இருக்கும் போது எதுக்காக அத அமைசிக்க முயற்சி பண்ணக் கூடாது?? எல்லா
விஷயத்தையும் மாத்திக்கணும், விட்டுக்கொடுக்கணுமனு இல்ல.. அப்படி மாத்திகிட்டு,
விட்டுக் கொடுத்துட்டு, நாம நாமளா வாழாம வேற ஒருத்தரா ஏன் வாழணும்??? நீ
அப்படிங்கறது ஒரு நிஜம்.. ஒரிஜினல்.. அது தான் எனக்கு வேணும்.. உனக்கு புடிச்ச
விஷயம்.. உனக்கு புடிச்ச இடம்.. உனக்கு புடிச்ச வேலை.. உனக்கு புடிச்ச நண்பர்கள்,
உனக்கு புடிச்ச உறவுகள், அம்மா அப்பா மாதிரி, உன்ன சுத்தி இருக்குற மாதிரி...
உனக்கு புடிச்ச விஷயங்கள நீ செய்யனும்.. அது தான் எனக்கு வேணும்.. எனக்கு சமைச்சி
போடறதுக்கும், சம்பாதிச்சி கொடுக்குறதுக்கும், என்னை நல்லா பார்த்துக்கணும்னு
கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நீ நீயா இருக்கணும்.. உனக்கு உன்னையே புடிக்கணும்..
உனக்கு புடிச்ச விஷயங்கள நீ தைரியமா பண்ணனும்.. ஒரு சக தோழியா என் வாழக்கை
பயணத்துல கூட வர்ற ஒருத்தர் தான் எனக்கு வேணும்.. கனவுகளை, ஆசைகளை, விருப்பங்களை
எல்லாம் புதைச்சிட்டு, எனக்காக விட்டுக் கொடுத்துட்டு நீ என்னோட வாழ்றதுல எனக்கு
விருப்பம் இல்ல.."
"அப்ப உனக்காக எதையும் விட்டுக் கொடுக்க
கூடாது.. நீயும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டனு சொல்றியா??? "
"அப்படி இல்ல.. இவனுக்காக எதையும்
விட்டுக் கொடுக்கலாம்.. இவளுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம்னு தோணுற ஒரு
கட்டம் வரும்.. அப்ப நமக்கே தெரியாம நாம ஒருத்தருக்கொருத்தர் நிறைய விட்டுக்
கொடுப்போம்.. அது நிச்சயமா பின்னாடி ஒரு நாள், இதெல்லாம் விட்டுக் கொடுத்தோமேனு
உறுத்துற அளவுக்கு இருக்காது.. அது தான் - வேற வழி இல்ல விட்டுக் கொடுப்போம்னு
விட்டுக் கொடுக்குறதுக்கும், உனக்காக தான விட்டுக் கொடுக்கிறேன், இது இல்லைனாலும்
நீ இருக்குறனு விட்டுக் கொடுக்குறதுக்கும் உள்ள வித்தியாசம்.. வாழ்க்கை நல்லா
இருக்கும்.. "
"சத்தியமா புரியல.. இப்படி இருந்த நாம
யாரையும் கல்யாணம் பண்ண முடியாது.. அதும் பொண்ணா பொறந்தா கண்டிப்பா பொறந்த வீடு,
பெத்தவங்க, ஊரு, நண்பர்கள், வேலை, சுதந்திரம், ஆசை, விருப்பு, எல்லாத்தையும்
கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து தான் ஆகணும்.. "
"கரெக்ட் தான்.. அதுக்கப்றம் ஏல்லாத்தையும்
விட்டுக் கொடுத்துட்டு, ஊருக்காக, அம்மா அப்பாக்காக சந்தோசமா இருக்குற மாதிரி
நடிக்கணும்.. அப்புறம் குழந்தைகளுக்காக.. நாம நமக்காகனு எப்ப தான் வாழ்வோம்
சொல்லு.. இத சொன்னா என்ன நினைப்பாளோ, நினைப்பானோனு பயப்படனும்.. செய்யுற ஒவ்வொரு
விஷயத்துக்கும் பெர்மிசன் கேக்கணும்.. இந்த ட்ரெஸ் போட்டா என்ன சொல்வானோனு
யோசிக்கணும்.. ஒரு பையன ஃபிரெண்ட்னு சொன்னா அவன் என்ன நினைப்பானோ அல்லது பொண்ண
ஃபிரெண்ட்னு சொன்னா அவள் என்ன நினைப்பாளோனு யோசிக்கணும், வீட்டுக்கு கூப்பிட இல்ல
அவங்க வீட்டுக்கு நாம போறதுக்கு யோசிக்கணும், நிறைய சந்தோஷமான தருணங்களை மிஸ்
பண்ணனும்.. இதெல்லாம் வேண்டாம் சொல்றேன்.. உனக்கு என்ன புடிக்குமோ அதையே எப்பவும்
பண்ணனும், பேசணும் - யோசிக்காம.. நீ நீயா இருக்கறது தான் அழகு.. உனக்கு புடிச்ச
மாதிரி நீ வாழ்றது தான் அழகு.. "
"நீ ஏன் இவளோ யோசிக்குறனு தெரியல.. பட்
நல்ல விஷயம் தான்.. பசங்க ஒரு பொண்ணுக்காக இவளோ யோசிப்பாங்களானு எனக்கு தெரியல..
"
"ஹா ஹா ஹா ... மத்தவங்கள பத்தி எனக்கு
தெரியல.. ஆனா நா யோசிப்பேன்.. "
"எல்லாரும் சொல்ற மாதிரி உன்ன கல்யாணம்
பண்ணிக்க போற பொண்ணு கொடுத்து வச்சவ தான்.. "
"காதலுக்கு கண் இல்லைன்னு ஏன்
சொல்றங்கனு இப்ப புரியுதா??... "
"அது சரி....... அந்த டாபிக் விடு.. இது
சொல்லு... ஒருவேளை உன்னை காதலிச்சிட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன
பண்ணுவ?"
"ஏன் இப்படி கேக்குற? அப்படி ஒரு நிலைமை வராது.. "
"வந்தா என்ன பண்ணுவ? எங்க வீட்ல யாருமே ஒத்துக்கல.. யாருக்கும் புடிக்கல.. நானும் வீட்ல
பாக்குற பையனுக்கு ஓ.கே சொல்லிட்டேன்.. என்ன பண்ணுவ?"
"ஒண்ணும் பண்ண மாட்டேன்.."
"கோபப்பட மாட்டியா? ஏன் என்ன விட்டுப் போறன்னு சண்டபோட மாட்டியா? அவ்ளோ
ஈஸியா என்ன விட்டுக் குடுத்துடுவியா?"
"ஹா.. ஹா.. ஹா.. என்ன விட்டு
இன்னொருத்தனை கல்யாணம் பண்ணனும்னு உனக்கு தோணுச்சுனாலே நீ என்னை விட்டுக்
குடுத்துட்டன்னு தான அர்த்தம்.. ஏதோ ஒரு பெரிய பிரச்சனை, சூழ்நிலைன்னு
வேற ஒரு சாய்ஸ் வந்தாலும், அதையும் தாண்டி இவன் தான் நமக்கு
லைஃப்னு தோணனும்.. அப்படி தோணலன்னா நான் அந்த அளவுக்கு நடந்துக்கலன்னு தான
அர்த்தம்.. அப்போ என் மேல தான தப்பு.. இந்த உலகமே எதிரா வந்தாலும் இவன் கூட வாழுற
வாழ்க்கையை மிஸ் பண்ண கூடாதுன்னு உனக்கு தோணுற அளவுக்கு நான்
இருந்துருக்கனும்.."
"அதுக்காக வேற ஒருத்தர் கூட என்னை வச்சு
எப்படி உன்னால பார்க்க முடியும்... எப்படி ஏத்துக்குவ?"
"ஏதோ ஒரு வகைல அது உனக்கு சந்தோஷத்த
குடுத்தா கண்டிப்பா ஏத்துக்குவேன்.. லவ் பண்ணும் போது உன் சந்தோஷம் தான் எனக்கு
எல்லாம்ன்னு சொல்லிட்டு.... இது தான் எனக்கு சந்தோஷம், என்
வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம்ன்னு நீ வந்து நிக்கும் போது அத ஏத்துக்கலன்னா,
நான் சொன்னது எல்லாம் பொய் ஆகிடாது? எப்பவுமே
உன் மனசுக்கு எது சந்தோஷமோ, அத நீ செஞ்சா அது எனக்கும்
சந்தோஷம் தான்.."
"இப்போ இப்படி சொல்லுவ... விட்டுப் போனப்புறம் எல்லா பொண்ணுகளும் இப்படித் தான்னு திட்டுவ.. யாரு
கேட்டாலும் நான் ஏமாத்திட்டு போய்ட்டேன்னு தான சொல்லுவ.. இல்ல நம்மள பத்தி
ஊரெல்லாம் சொல்லி என்னை அசிங்கப் படுத்துவேன்னு மிரட்டுவ.."
"கண்டிப்பா இல்ல.. அப்படி பண்ணுனா நான்
உன்ன புரிஞ்சுக்கலன்னு அர்த்தம்.. சேர்ந்து எடுத்த போட்டோ நெட்ல போடுவேன், லவ் பண்ணுனப்ப அனுப்புன மெசேஜ் எல்லாருக்கும் அனுப்புவேன், முகத்துல ஆசிட் ஊத்துவேன், இதெல்லாம் பண்ணுற ஆள்
நான் இல்லை... அப்படி பண்ணனும்னு யோசிச்சாலே நான் உன்னை லவ் பண்ணலன்னு அர்த்தம்..
உன்னை மிரட்டி, அசிங்கப்படுத்தி என்னை காதலிக்க வைக்க எப்படி
முடியும்? ஒரு நாளும் கட்டாயப்படுத்தி யாருக்கும் காதல்
வராது..."
"சரி நீ நல்லவன் தான்... மிரட்ட மாட்ட..
அப்ப லவ் ஃபெயிலியர் சொல்லிட்டு, தாடி வச்சுட்டு, சோகப்பாட்டு கேட்டுட்டு சுத்துவியா?"
"நான் ஏன் அப்படி சுத்த போறேன்.. எனக்கு
புடிச்சவங்களோட சந்தோஷத்துக்காக நான் ஒரு விஷயம் பண்றேன்.. அது எப்படி ஃபெயிலியர்
ஆகும்.. இப்படி வச்சிக்குவோம்.. நாம கல்யாணம் பண்ணிக்குறோம், ஆனா தினமும் உன்ன கஷ்டபடுத்துறேன்னு வச்சிக்குவோம்.. அத சக்சஸ்ன்னு சொல்ல
முடியுமா??? என் மனசுல உன் மேல உள்ள காதல் கொஞ்சம் கூட
குறையாத வரைக்கும் என் காதல் தோற்றுப் போச்சுன்னு சொல்ல முடியாது... அது நாம
கல்யாணம் பண்ணிகிட்டாலும், பண்ணிக்கலனாலும் பொருந்தும்.. ஒரு
பழமொழி உண்டு தெரியுமா.. காதலர்கள் தான் தோற்கிறார்கள்; காதல் தோற்பதே இல்ல..."
"சரி.. நான் உன்ன அவ்ளோ வொர்த்
இல்லைன்னு விட்டு குடுத்துறேன்.. நீயும் என்ன விட்டு கொடுக்கற.. கூட சேர்ந்து
வாழ்ற அளவுக்கு நா வொர்த் இல்லன்னு தான?? நா அந்த அளவுக்கு இல்லையா டா உனக்கு??
விட்டு போற அளவுக்கு தான் இருக்கேனா?"
"உன்ன விட்டுட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணுனா தான
அப்படி அர்த்தம்.. என் மனசுல உள்ள காதலும் மாற போறதில்ல.. நீயும் என் மனச விட்டு
போக போறதில்ல.."
"அய்யா சாமி.. உன்கிட்ட பேசி ஜெயிக்க
முடியாது... ஆனா என்னால அப்படி எல்லாம் முடியாது ப்பா.. வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன், என்
சந்தோஷத்த உன் சந்தோஷம்ன்னு நெனச்சிக்கோ, அப்படி இப்படின்னு
என்கிட்டே வந்துடாத... அந்த மாதிரி ஒரு நெனப்பு கூட வர கூடாது உனக்கு..."
"ஹா.. ஹா... ஹா.. உன்ன விட பெஸ்ட்
எனக்கு வேற யாரு இல்ல.. பெஸ்ட்டா என் கண்ணுக்கு யாரும் தெரிய போறதும் இல்ல....."
-----------------------------------------------------------------------------
இன்று வரை இருவருக்கும் ஒருவர் ஒருவர் தான் பெஸ்ட்.. நான்
நானாகவும் அவள் அவளாகவும் இருக்கிறோம்.. எனக்கு பிடித்ததென்று ஒரு உடை வாங்கி
வரும் போது அவளுக்கு பிடிக்கவில்லை என்று அணிய மறுக்கும் போது, சரியென்று அதை
ஏற்றுக் கொள்ளும் போது, எனக்குப் பிடிக்காத உணவென்றாலும் அவளுக்கு பிடிக்குமென்று
அதை சமைத்து இருவரும் உண்பது, இவையெல்லாம் விட்டுக் கொடுத்தல் அல்ல, இருவருக்கும்
உள்ள புரிதல் என்பதை அறிந்து கொண்டோம்.. லெட் ஹிம் ஹேவ் ஹிஸ் ஸ்பெஸ், லெட் ஹெர்
ஹேவ் ஹெர் ஸ்பெஸ் என்று கொஞ்சம் இருவருக்கும் ஒரு இடம் கொடுத்துக் கொண்டோம்..
ஒவ்வொரு நாளும் உணர்ந்தும் கொள்கிறோம்.. இட் இஸ் வொர்த் இட் என்று..
இந்த முறை உனக்கு அறிவுரையும் அது தான்.. ஒருவருக்கொருவர்
இடம் கொடுங்கள்.. நீ நீயாக இருக்கவும், அவள்/அவன் அவளாக/அவனாக இருக்கவும்..
மற்றவை அடுத்த மடலில்..
அன்புடன், அப்பா & அம்மா..